top of page

விந்தை இந்தியா...

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • Jul 25, 2023
  • 1 min read

கண் விழித்தேன்

புதிய நாளில்

ஒரு விந்தையான உலகில்...

விலை கொடுத்து

விண்மீனை ரசிக்கும்

வேலைப்பளுவில் வியர்த்த

மனிதன்...

இலைகளை மட்டுமே

களையெடுக்க பழகிய

விசித்திர சட்டங்கள்....

தன் குழந்தையின்

கலையார்வத்தை தகர்த்து

கலைநிகழ்ச்சியின்

கதை பேசும் கேவலம்...

எழுதுகோல்களைவிட

அடிகோல்களையே

அஸ்திவாரமாகக்கொண்ட

கல்விக் கழகங்கள்...

சங்கங்கள் சேர்த்து

ஆட்சியில்

சுங்கம் விதிக்கும்

அவலம்...

மக்கள் மக்கள் என

மாக்களாய் நடத்தும்

அரசியல் அநியாயம்...

தன் காயத்திற்கு

மற்றொருவன் மருத்துவம்

பார்க்க எதிர்நோக்கும்

சமுதாயம்...

அடுத்த வீட்டுக்காரன்

செய்யும் கொலைக்கு

தன் வீட்டில்

பழிதீர்க்கும் அசிங்கம்...

ஒரு குடிலுக்குள்ளே

இனவெறி தாண்டவமாடும்

சிறுமைத்தனம்...

இவை என் இதயத்தை

நெருடலாய் வருட

கல்லூரியின் முதல் நாளில்

கால்வைத்தேன்...

கல்லூரி நடையில்

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்றிருந்தது...

விண்ணப்பத்தின் நான்காம்

கேள்வியாய் “சாதி” என்றிருந்தது

கவலையுடன் அந்த

கருமத்தையும் எழுதி

சாட்சிக்கு கையொப்பமும்

இட்டு வந்தேன்...





Comments


bottom of page